மத்திய பிரதேசம், மந்த்சோர் பகுதியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் நடந்த இளைஞர் விழா நிகழ்வில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விழா நடைபெறும் போது சில ஆண் மாணவர்கள், பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் ஒளிந்து பார்த்ததுடன், அவர்களின் வீடியோக்களையும் ரகசியமாக பதிவு செய்தது தெரியவந்துள்ளது. சம்பவத்தை உணர்ந்த சில மாணவிகள் உடனே சத்தமிட்டு, கல்லூரி பொறுப்பாளர் பிரீதி பஞ்சோலி அவர்களிடம் புகார் தெரிவித்தனர்.

 

பிரச்சனைக்கு தீவிரமாக எதிர்வினையாற்றிய கல்லூரி நிர்வாகம், கல்லூரியின் CCTV காட்சிகளை சரிபார்த்தது. அதில் சில மாணவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கிருந்து சென்றதாக தென்பட்டது. இதையடுத்து பிரீதி பஞ்சோலி எழுத்து மூலமாக பான்புரா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவர் அமைப்பு ஏ.பி.வி.பி.யுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 3 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

இன்னொருவர் தற்போது தப்பியோடிவிட்டார் எனவும், அவரை பிடிக்க தீவிர முயற்சி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

“பெண்களின் மரியாதை குறித்து பேசி வரும் பாஜக சார்பு மாணவர் அமைப்பின் உறுப்பினர்களே இத்தகைய கேவலமான செயல்களில் ஈடுபடுவது மிகுந்த அவமானம்,” என்று காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.