மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ராஜ் நகர் பகுதியில், கடந்த சனிக்கிழமை மாலை நேரத்தில் ஒரு சோகச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள காவல்துறைக் காவல் சாவடி அருகே வசித்து வந்த 49 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் விஜய் என்ற லட்சுமண் ராவ் ஹோல்கர் என்பவர், அப்பகுதிக்கு அழைத்து வரப்பட்ட யானைக்கு அருகில் சென்று வெல்லம் ஊட்ட முயன்றுள்ளார். அப்போது யாருமே எதிர்பாராத விதமாக அந்த யானை திடீரென ஆவேசம் அடைந்து விஜய்யைத் தாக்கியது. தும்பிக்கையால் அவரை அப்படியே தூக்கி நிலத்தில் வீசிய அந்த யானை, அவரது நெஞ்சின் மீது ஏறி மிதித்ததில் அவர் படுகாயமடைந்தார்.

மத நிகழ்ச்சி ஒன்றுக்காக இந்தூருக்கு அழைத்து வரப்பட்ட இந்த யானை, நிகழ்ச்சியைத் தொடர்ந்து அதன் பாகனுடன் சேர்ந்து நன்கொடை வசூலிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில்தான் விஜய் யானைக்கு உணவு கொடுக்க அருகில் சென்றுள்ளார். யானை தாக்கியதைக் கண்டு அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். படுகாயமடைந்த விஜய்யை மாவட்ட மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கும் அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த  காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் நடந்தபோது விஜய் மதுபோதையில் இருந்ததாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விஜய்க்கு மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில், இந்தக் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள போலீசார், இந்த விபத்து தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யானையுடன் வந்த பாகனை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகம் வாழும் குடியிருப்புப் பகுதிக்குள் இதுபோன்ற பெரிய விலங்குகளை அழைத்து வரும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விலங்குகளுக்கு அருகில் செல்லும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சோகச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.