கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் காலனி தெரு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு சம்பந்தமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 21-ஆம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன் என்பவர் கடனுக்கான தவணை தொகையை வாங்குவதற்காக பரிமளாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ரவிச்சந்திரன் பரிமளாவை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பரிமளா கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.