கரூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கந்தசாமியும், லட்சுமியும் இரவு நேரத்தில் சாப்பிட்டு தூங்கி விட்டனர். அதிகாலை 6 மணிக்கு கந்தசாமி கடைவீதிக்கு சென்று விட்டார். இதனையடுத்து டீ போடுவதற்காக லட்சுமி சமையலறைக்கு சென்றபோது வீட்டின் மேல்தளம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.