திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கடாஸ்திரிகோட்டையில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மணிவேல் வத்தலகுண்டு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மணிவேல் நாகலாபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் நாகலாபுரம் பிரிவு அருகே சென்ற போது மணிவேலின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மணிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.