சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சேசாச்சலம் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மோகன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடியோ எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த திருடன் விலை உயர்ந்த செல்போனை திருடிவிட்டு வேறு ஏதாவது பொருட்கள் இருக்கிறதா? என நோட்டமிட்டு கொண்டிருந்தான்.

அந்த நேரம் கண் விழித்து எழுந்த மோகன்ராஜ் திருடன், திருடன் என கூச்சலிட்டபடி அவனை பிடிக்க முயன்றார். இதனை எதிர்பார்க்காத திருடன் அந்த செல்போனை தூக்கி வீசிவிட்டு மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்ட் பலகையில் அடிபட்டு, மரக்கிளையில் மோதி கீழே விழுந்த திருடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து அறிந்த போலீசார் திருடனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த திருடன் சைதாப்பேட்டை கோட்டமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன்(41) என்பது தெரியவந்தது. அவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் மீண்டும் திருடில் ஈடுபட்ட போது உயிரிழந்தது தெரியவந்தது.