பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வழியாக நடந்த கோடிக்கணக்கான ரூபாய் சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்ற வழக்கில், ஜம்மு-காஷ்மீர் போலீசாருக்குப் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் பகடைக்காயாகச் செயல்பட்ட சோனம் என்பவரைத் தொடர்ந்து, வழக்கின் உண்மையான மூளையாகச் செயல்பட்ட அவரது தோழியான 26 வயது பூஜா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து காஷ்மீருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்ட பூஜாவின் தந்தை எரிவாயு சிலிண்டர் விநியோக வாகனத்தின் ஓட்டுநராக உள்ளார்.
ஒரே இரவில் கோடீஸ்வரராக வேண்டும் என்ற பேராசையால் பூஜா, காஷ்மீரைச் சேர்ந்த உமர் என்ற ஏஜென்ட் மூலம் பாகிஸ்தான் நெட்வொர்க்குடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோதுதான் சோனமுடன் பூஜாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. சோனமின் குடும்ப வறுமையைப் பயன்படுத்திய பூஜா, “இந்த வேலையில் அதிக லாபம் இருக்கிறது, மாட்டிக்கொள்ளும் பயமும் இல்லை” என அவரது மூளைச்சலவை செய்து, இந்தச் சட்டவிரோத நெட்வொர்க்கிற்குள் இழுத்துவிட்டுள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பூஜா நீண்ட காலமாகப் போலி மற்றும் பினாமி வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாயை அங்கிங்குமாகப் பரிமாற்றம் செய்து, அதற்குப் பதிலாக கமிஷன் பெற்று வந்தது அம்பலமாகியுள்ளது. கைதான பூஜாவிடமிருந்து பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளும், பாகிஸ்தான் தொடர்புகளை உறுதிப்படுத்தும் மொபைல் போன் அழைப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து பூஜாவின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நெட்வொர்க் மூலம் இதுவரை எவ்வளவு பணம் கைமாறியுள்ளது மற்றும் அந்தப் பணம் எந்த மாதிரியான நாசகார வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட இருந்தது என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
