சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி குமரன் காலனி 9-வது தெருவில் சத்யபிரியா(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா துறையில் மேக்கப் கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களது மகள் யோகிதா கனடாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனடாவில் இருக்கும் தனது மகளை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசிய சத்யபிரியா எனக்கு வாழ பிடிக்கவில்லை, நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த யோகிதா சென்னையில் இருக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சத்யபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்யபிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.