மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு, சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னியவலசு பகுதியில் தற்போது குடும்பத்துடன் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் ராமச்சந்திரன் தனது வீட்டில் முறுக்கு தயாரித்து ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜெயப்பிரியா தனது மகன்களுடன் உசிலம்பட்டிக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு குடும்பத்தினர் கணவன் மனைவி இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஜெயப்பிரியா தனது தாயின் நகையில் தனக்கு வரவேண்டிய பங்கையும் தனது தங்கைக்கு கிடைக்க உதவி செய்ததாக தெரிகிறது. அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து ராமச்சந்திரன் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் ராமச்சந்திரன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயப்பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பெருந்துறை ரயில் நிலைய ரோட்டில் நின்று கொண்டிருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.