தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஆவார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உயில் மூலம் எனக்கு 6 கோடி மதிப்புள்ள 1 1/2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் பெயரில் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று தருவதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கூறினர்.

இதனை நம்பி நிலத்தை அவரது பெயருக்கு கிரையம் செய்து கொடுத்தேன். ஆனால் இதுவரை கடன் எதுவும் வாங்கி தராமல் நிலத்தை மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கூறிய நபர்கள் பல்வேறு நபர்களிடம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.