தஞ்சாவூரில் இருந்து 28 பயணிகளுடன் அரசு பேருந்து நேற்று அதிகாலை நேரத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஜான் மில்லர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக மணிகண்டன் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.எஸ் டோல்கேட் மேம்பாலத்தில் வைத்து சிமெண்ட் லோடு ஏற்றி தூத்துக்குடி நோக்கி சென்ற லாரியை அரசு பேருந்து டிரைவர் முந்தி செல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் இடது பக்கம் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜான் மில்லர் உள்பட 30 பேரும் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் 7 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். மற்ற 23 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.