திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா, தாளடி பயிரில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிட 2,256 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் தலா 4 இடங்களில் புள்ளியியல் துறையினால் வழங்கப்பட்ட எதேச்சை எண் மூலம் சர்வே எண் கண்டறியப்பட்டு இச்சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில் சில கிராமங்களில் மட்டும் பயிர் அறுவடை பரிசோதனையானது  நடத்தப்பட்டு வருகிறது. ஆகவே இப்பரிசோதனை மேற்கொள்ளும் வேளாண், வருவாய், புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவன அலுவலர்கள் அந்த கிராமத்து விவசாயிகள் அத்திட்டத்தை செயல்படுத்த பல இடையூறுகள்  ஏற்படுத்துவதாக தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் சாகுபடிதாரரும், வேளாண், புள்ளியியல், வருவாய்த்துறை மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மட்டும் பயிர் அறுவடை பரிசோதனை செய்யும் இடத்தில் இருக்க அனுமதி உண்டு.

மேலும் இதை தவிர வேறு எந்த அலுவலரோ, விவசாயிகளோ அல்லது தனி நபர்களோ அங்கு இருந்தால் பயிர் அறுவடை பரிசோதனை நடத்த இயலாமல் போகும். இவ்வாறு  அச்சோதனை பயிர் காப்பீட்டு நிறுவனத்தினால் ஆட்சேபிக்கப்பட்டு, அந்த  கிராமத்திற்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையானது, வழங்க இயலாத நிலையும்  ஏற்படும். எனவே பயிர் அறுவடை பரிசோதனைக்கு ஏதாவது இடையூறுகள் விளைவித்தால் அந்த நபர்களின் மீது குற்றவியல் வழக்குபதிவும் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு தங்களது கிராமங்களில் நடைபெறவுள்ள பயிர் அறுவடை பரிசோதனையை சரியான முறையில் நடத்திட அனைவரும்  தகுந்த ஒத்துழைப்பை  கொடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.