திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் மாநாடு வருகின்ற 24-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்த முப்பெரும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது, நாம் தொடங்கிய தர்மயுத்தம் எந்த வித பிசிறும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இது தொண்டர்களுக்காக எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் என்பதால், தலைமை யார் என்பதை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பொதுச் செயலாளர் அம்மா தான் என்ற உச்சபட்ச தீர்மானத்தின் அங்கீகாரத்தை ஒரு கூட்டம் நீக்கி உள்ளது.

அதிமுகவில் அமைப்பு ரீதியான தேர்தலை ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நடத்தினார்கள். ஆனால் இன்று சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட விதிகளை மதிக்காமல் புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளனர். தமிழக மக்கள் நமக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். தர்மயுத்தத்தின் இறுதியில் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் ஒருங்கிணைப்போம் என்றும் அவர்களும் திருச்சி மாநாட்டுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.