கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்போன்களில் ஆபாச படம் பார்க்கும் நபர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் செல்போனில் ஆபாச படம் பார்க்கும் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தன்னை சைபர் கிரைம் போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து நீங்கள் ஆபாச படம் பார்ப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளோம் என கூறினார்.

மேலும் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 15,000, ஆவண செலவாக 340 என மொத்தம் 15 ஆயிரத்து 340 தர வேண்டும் என கூறினார். அதனை நம்பி மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிருக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கோவை மாநகர போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வடவள்ளியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவரான மதன் என்பவர் பலரிடம் பணத்தைப் பறித்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவருக்கு உடந்தையாக 3 பேர் இருந்தனர் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.