கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெங்கடேசன் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலை வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் பணிக்கு வெங்கடேசன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு அந்த பணி பிடிக்கவில்லை.

இதனால் தான் ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் பணி வழங்குமாறு அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலை வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.