சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் வீரமணி என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அனகாபுத்தூர் லட்சுமி தெருவை சேர்ந்த ரங்கராஜன், கீழ்கட்டளையை சேர்ந்த சுரேஷ்குமார், திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேஷ் உள்பட சிலர் கோவாவில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு ரிசர்வ் வங்கி மூலம் 9 ஆயிரம் கோடி பணம் வரப்போகிறது எனவும், அதில் எனது கம்பெனியை மேம்படுத்த 5 கோடி ரூபாய் வட்டி இல்லாத கடன் வாங்கி தருவதாகவும் கூறினார்கள்.

அவர்கள் ரிசர்வ் வங்கியின் போலி ஆவணங்களை காண்பித்து என்னை ஏமாற்றி 1 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரங்கராஜன், சுரேஷ்குமார், ராஜேஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.