கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் மேட்டூர் பகுதியில் பாத்திர வியாபாரியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு கோபாலகிருஷ்ணன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்குள் விழுந்தது. இதனால் கோபமடைந்த கோபாலகிருஷ்ணன் சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செங்கல்லை எடுத்து அவர்கள் மீது வீசியதாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுவர்கள் தங்களது உறவினர்களான கண்ணன், சசிகுமார், செந்தில்குமார், பிரதீப் ஆகியோரிடம் தெரிவித்தனர். அவர்கள் கோபால கிருஷ்ணனை தட்டி கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கோபாலகிருஷ்ணன் 4 பேரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த 4 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.