சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கஞ்சி நகரில் கமலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கமலேஷ் மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம்-தண்டுரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவரில் மோதியது.

இதனால் 25 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கமலேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கமலேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.