கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ராம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஒருவர் ராமிடம் மது குடிப்பதற்கு பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் ராமிடம் இருந்த பணத்தை அந்த நபர் பறிக்க முயன்றதாக தெரிகிறது.

இதனை தடுத்து நிறுத்திய போது ராமுக்கும், அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கோபமடைந்த நபர் ராமுவை அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.