நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூபாய்.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். இக்கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு திருப்பி செலுத்தியது. இதுகுறித்து விஷாலுக்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும்வரை விஷால் பட நிறுனம் தயாரிக்ககூடிய அனைத்து படங்களுடைய உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாமல் உத்தரவாதத்தை மீறி “வீரமே வாகை சூடும்” எனும் படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் லைகா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி 15 கோடி ரூபாயை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்யவும், சொத்து விபரங்களை தாக்கல் செய்யுமாறும் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார்.

பிறகு தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில் மேல் முறையீடானது  செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ரூ.15 கோடியை கோர்ட்டில் விஷால் செலுத்தவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்து தீர்ப்பளித்து உள்ளனர். அதோடு அந்த உத்தரவு தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள உரிமையியல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கக்கூடிய படங்களை திரையரங்குகள் (அ) ஓடிடி தளங்களில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து விஷாலின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.