புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வீரதரன், தயாளன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே வீரமுத்து அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் வீரமுத்து தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்றார். மேலும் வீரமுத்து பேசி வந்த பெண்ணும் கவிதாவை தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து கவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா தனது மகன்களுடன் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் கவிதா மற்றும் அவரது இரு மகன்களை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கு செல்லாமல் இருந்த கவிதாவின் மகன்களை போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.