நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான ஜிம்கானா கிளப் அமைந்துள்ளது. சுமார் 99 ஆண்டுகள் பழமையான இந்த கிளப் இருக்கும் நிலம் டிபென்ஸ் எஸ்டேட்டிற்கு சொந்தமானது. அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஜிம்கானா கிளப்பை நடத்தி வந்துள்ளனர். இங்கு பொழுதுபோக்கு அம்சங்களான கால்ப், டென்னிஸ், தங்கும் விடுதிகள், மதுபார் உள்ளிட்டவை செயல்படுகிறது. இங்கு ராணுவ அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் வந்து செல்கின்றனர்.

மேலும் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஜிம்கானா மைதானத்தில் தரை இறக்கப்படும். தற்போது குத்தகை காலம் முடிவடைந்ததால் மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் கிளப் நிர்வாகம் குத்தகை பணத்தை செலுத்தவில்லை. இதனால் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள், வெலிங்டன் கன்டோன்மென்ட் அதிகாரிகள் என 50-க்கும் மேற்பட்டோர் ஜிம்கானா கிளப்பிற்கு சென்று ஒவ்வொரு அறைகளையும் பூட்டி சீல் வைத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.