சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கம்பர் தெருவில் சண்முகநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் சண்முகநாதன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர் உங்களுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு சுங்க வரி கட்ட வேண்டும் என அந்த நபர் தெரிவித்தார்.

இதனை நம்பி அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு சண்முகநாதன் 1 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகு சண்முகநாதனுக்கு எந்த பரிசு பொருளும் வரவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சண்முகநாதன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.