வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சில நபர்கள் அரசு துறைகளில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை தெரியும் என பொதுமக்களிடம் கூறுகின்றனர். அவர்கள் அரசு அலுவலர்களிடம் பேசி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என கூறி மக்களிடமிருந்து மனுக்களை வாங்கி ஏமாற்றி பணம் பறிப்பதாக புகார்கள் வந்தது.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களுக்கு முன்பாக சில நபர்கள் பத்திரிகையாளர் எனக்கூறி போலியான அடையாள அட்டையை உபயோகப்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்று சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடி செய்யும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் 9498042453 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல் அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.