கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, புதுப்பாளையம் மசூதி தெருவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம் என தனி தனியாக ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார். அவரை நம்பி மாதம் தோறும் பணம் கட்டி, தீபாவளி சீட்டும் கட்டினோம். மேலும் எங்களுக்கு பழக்கமானவர்களையும் அந்த ஏல சீட்டில் சேர்த்து விட்டோம்.

இந்நிலையில் சுமார் 1 கோடி வரை மோசடி செய்து விட்டு அந்த பெண் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். தற்போது வீட்டையும் பூட்டி விட்டு எங்கேயோ தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வருகிறது. எனவே பணத்தை பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.