விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணவேலி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக்கில் சதீஷ்குமாருடன் நண்பராக பழகிய ஒருவர் உங்களுக்கு பரிசு பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட ஒருவர் தான் டெல்லியில் இருக்கும் சுங்கவரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு வந்த பார்சலை பெற 35 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி சதீஷ்குமார் அவர் கூறிய வங்கி கணக்கிருக்கு பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் கூறியபடி எந்த பரிசுப் பொருளும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சதீஷ்குமார் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.