வேலூர் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரி பேட்டை முருகன் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் துணைத் தலைவர் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர். மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பிறகு தான் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.