திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவில் தெருவில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சின்னாளப்பட்டியில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தேவராஜ் வெள்ளோடு பிரிவு அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு திண்டுக்கல் வருவதற்காக சாலையை கடந்தார்.

அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் மொபட் மீது மோதியதால் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த தேவராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.