பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் 150 மிகச்சிறிய ரக ‘பீகோ’ செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியவை சார்பாக திட்டம் ஒன்று போடப்பட்டது. இதற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பது, செயற்கை கோள் வடிவமைப்பது தொடர்பான திட்டத்தில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நடந்ததில் தேனி அருகே ஸ்ரீரெங்கபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கனிஷ்கர், மனோஜ், அமர்நாத், மனோபாலா, விக்னேஷ், ரோகித், வசந்தகிருஷ்ணா, அருண்குமார் ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதுபோன்று அறிவியல் ஆர்வம் கொண்ட மேலும் சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு 3 நாட்கள் ஆன்லைன் வழி பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கோவையில் கடந்த 10-ந் தேதி பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டதில் ராக்கெட் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். இந்த பயிற்சியில்  ஒரு பிரிவு மாணவர்கள் குழுவினர் பீகோ எஸ்.ஆர்.ஜி. கனிஷ்கா என்ற பெயரில் மிகச்சிறிய அளவிலான  செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்தனர். அவை கணினி மூலம் பரிசோதித்து வெற்றி அடைந்த நிலையில், அந்த செயற்கை கோள் மற்ற மாணவர்கள் வடிவமைக்கும் செயற்கை கோளுடன் இணைத்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்நிலையில் இந்த செயற்கை கோளை வடிவமைத்த மாணவர்கள் குழுவினரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் பாராட்டினர்.