கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையகவுண்டன் பாளையம் அரண்மனை வீதியில் கண்ணன்- சந்திர பிரபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், விக்னேஷ் செந்தில் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் விக்னேஷ் செந்தில் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலை முடிந்து விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது மேம்பாலத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த விக்னேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.