மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரெயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரெயில் மூலம் அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது அலுவலகத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். இத்திட்டத்திற்காக கையாளும் கட்டணம் மற்றும் பார்சல் கட்டணம் என்று 1 கி.மீ. தூரத்துக்கு 1 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, மதுரை-சென்னை தேஜஸ் ரெயிலில் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய ரெயில்வேயில் 15 பகுதிகளில் இருந்து தபால்துறையுடன் இணைந்து இந்த ரெயில் சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, தென்னக ரெயில்வேயில் முற்றிலும் பார்சல் பெட்டிகளை கொண்ட கதிசக்தி பார்சல் என்ற ரெயில் புதிதாக இன்றிலிருந்து மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலானது மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், கூடூர், விஜயவாடா வழியாக கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரெயில் நிலையம் வரை செல்கிறது. இந்த ரெயில் வாரந்தோறும் இயக்கப்பட உள்ளதால், 35 கிலோவுக்கு மேல் உள்ள பார்சல்களையும்  தபால்துறை மூலம் அனுப்பி வைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு காப்பீடு வசதியும் உள்ளது. இந்த ரெயில் மூலம் மதுரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிறு, குறுந்தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். இதற்கான முழு ஏற்பாடுகளையும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் ஜெய்சங்கர் தலைமையில், ரெயில்வே தபால்சேவை கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட தபால்துறையினர் செய்து வருகின்றனர்.