விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் ராதாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தரணி என்பவர் விழுப்புரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இன்று காலை 6 மணி அளவில் தரணி அவரின் வீட்டின் முன்பாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தரணியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே தரணி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நர்சிங் கல்லூரி மாணவி தரணி காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தரணியை வெட்டி கொலை செய்த மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (25) என்ற வாலிபரை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.