திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெறையூர் என்ற பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு விபத்தில் பலத்த காயம் அடைந்த வாசுகி மற்றும் சாந்தி ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்தை தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து செங்கம் பகுதிக்கு செல்லும் பகுதியில் சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

காரில் பெரியகோளப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வம், சக்திவேல், சஞ்சய், காமாட்சி, இளையராஜா ஆகிய 5 பேர் பயணித்த நிலையில், இளையராஜா, காமாட்சி மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று இரவு மற்றும் இன்று காலை வெவ்வேறு இடங்களில் திருவண்ணாமலையில் நடைபெற்ற இரு கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.