கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. அப்போது கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக திரண்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கலக்குறிச்சியை சேர்ந்த பழனியாத்தாள் என்ற மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வஞ்சியாபுரம் பிரிவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் மதுரையை சேர்ந்த மது(37) என்பதும், அவர்தான் மூதாட்டியிடம் இருந்து தங்க நகை பறித்து சென்றதும் தெரியவந்தது. இவர் மீது காஞ்சிபுரம், நெல்லை போன்ற பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதனையடுத்து மதுவை போலீசார் கைது செய்து தங்க நகையை மீட்டனர்.