திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தில் வசிப்பவா் சுப்பிரமணி (52). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்ற பெண்ணை மணமுடித்தார். அதன் பின் அவர்கள் இருவரும் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தில்  சுப்பிரமணியின் தாயாருடன் வசித்து வந்தனர். இந்நிலையில் தேவிக்கும், சுப்பிரமணியின் தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததால், சுப்பிரமணியின் அக்காள்  வீட்டிற்கு, அவரது அம்மா சென்றுவிட்டாா். இதனை தொடர்ந்து தேவி, தனது கணவரிடம் “நாம் திண்டுக்கல் சென்று அங்கு சந்தோஷமாக வாழலாம்” என கூறியபோது, அவா் மறுத்து விட்டார். இந்நிலையில் கடந்த 15-ந் தேதி சுப்பிரமணி காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளார்.

அப்போது அவரது காலில் தேவி ஊசி ஒன்றை செலுத்தி, அவரின் சுயநினைவை இழக்க செய்துள்ளார். இதனையடுத்து திருப்பூா் தனியாா் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்திருப்பதாக தெரிவித்தனா். உடனே மருத்துவமனையில் இருந்த தேவி மெதுவாக நழுவி அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார். இதனையடுத்து மனைவி மீது சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசாா் தேவியை வலைவீசி தேடியபோது, அவர்  நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தேவியை கைது செய்து விசாரணை நடத்தியதில், போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதாவது எனக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் நடந்த நிலையில், விவசாயி சுப்பிரமணிக்கு 50 வயது ஆகியும் திருமணமாகவில்லை என்றும், அவருக்கு சொந்தமாக சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் 2 ஏக்கர் நிலம் இருப்பதும் புரோக்கர் மூலம் தெரியவந்தது. எனவே 3-வதாக அவரை திருமணம் செய்து, பின்  நாமக்கல்லைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துள்ளார். எனவே அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பெண் பார்த்தது தெரியவரவே அவரை திருமணம் செய்தால், ஆடம்பரமாக வாழலாம் என முடிவு செய்தேன். இதற்கு தடையாக இருக்கும் சுப்பிரமணியை தீர்த்து கட்டி, அவருடைய சொத்துகளையும் அடையலாம் என நினைத்தேன். ஆனால் என் திட்டம் எதுவும்  நிறைவேறவில்லை.

அதற்குள் போலீசார் பிடித்து விடுவார்கள் என பயந்து நாமக்கல்லுக்கு தப்பி சென்றேன். உடனே 4-வதாக அந்த கோடீஸ்வரரை 27-ந் தேதி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். இந்நிலையில் போலீசில் மாட்டி கொண்டேன் என தேவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.