இறந்தவர்களின் பெயரில் பயன்பாட்டில் இருந்து வரும் எல்.பி.ஜி (LPG) சமையல் எரிவாயு இணைப்புகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன.

​தற்போது எரிவாயு உருளை விநியோகத்தில் டிஜிட்டல் முறை மற்றும் ஓ.டி.பி (OTP) சரிபார்ப்பு முறை ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கே.ஒய்.சி (KYC) புதுப்பிக்கப்படாத மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படாத ஆயிரக்கணக்கான சமையல் எரிவாயு இணைப்புகள் நாடு முழுவதும் வரிசையாக முடக்கப்பட்டு வருகின்றன.

​இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், “இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள சமையல் எரிவாயு இணைப்புகளைப் பயன்படுத்தி வருபவர்கள், உடனடியாக உரிய இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுதாரரின் ஆதார் அட்டையைச் சமர்ப்பித்து இணைப்பைத் தங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், அந்த எரிவாயு இணைப்புகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

​எண்ணெய் நிறுவனங்களின் இந்தத் திடீர் நடவடிக்கை மற்றும் கெடு விதிப்பால், பெயர் மாற்றம் செய்யாமல் வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் குடும்பங்களும் பெரும் கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.