மதுரை டிவிஎஸ் நகர் அருகில் கோவலன் நகர் மணி மேகலை தெரு பகுதியை சேர்ந்த சேதுபதி-மீனாட்சி தம்பதியினரின் மகன்கள் அன்புசெல்வம், தமிழரசன். இதில் அன்புசெல்வத்திற்கு ஜனனி ஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணமாகி நித்ரா ஸ்ரீ(8), ராட்சன ஸ்ரீ(7) என 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். அதேபோன்று தமிழரசனுக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் திருமணமாகி தாரணி ஸ்ரீ(3) என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் தைப்பூச தினத்தையொட்டி கூட்டு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர்.

அப்போது கோயில் அருகில் இருந்த ஒரு சிற்றுண்டி கடையில் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் சாப்பிட்ட அந்த ஐஸ்கிரீமில் இறந்த தவளை ஒன்று கிடந்தது. இதை பார்த்த குழந்தை நித்ரா ஸ்ரீ தந்தை அன்பு செல்வத்திடம் கூறினார். உடனே குழந்தைகளை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பின் 3 குழந்தைகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களுக்கு பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.