கோடை விடுமுறை முடிந்து இன்று (புதன்கிழமை) முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக, நேற்று பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ காமாட்சி, குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்குள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் (HM) அறைக்குச் சென்று அவர் ஆய்வு செய்தபோது, அங்கிருந்த ஷோகேஸில் ‘ஸ்வீட் பீர்’ பாட்டில்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு எம்.எல்.ஏ மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ​மாணவர்கள் கல்வி கற்கும் பள்ளி வளாகத்தில், அதுவும் தலைமை ஆசிரியரின் அறையிலேயே இப்படியான பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கடும் கோபமடைந்த பல்லாவரம் எம்.எல்.ஏ காமாட்சி, பள்ளி நிர்வாகத்தைக் கடுமையாக சாடினார்.

“இதையெல்லாம் உடனடியாக இங்கிருந்து அகற்றுங்கள்” என அங்கிருந்த தலைமை ஆசிரியருக்கு ஸ்பாட்டிலேயே அதிரடி உத்தரவு பிறப்பித்தார். பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், நேற்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் ஸ்வீட் பீர் பாட்டில்கள் இருந்த விவகாரம் குரோம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.