டெல்லி மாளவியா நகரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஹோட்டல் முழுவதும் கரும்புகை சூழ்ந்து, உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தீ மளமளவென பரவியதால் தப்பிக்க வழியில்லாமல் தவித்த மக்கள், தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹோட்டலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளில் இருந்து கீழே குதித்தனர்.

இதைப் பார்த்த அப்பகுதி உள்ளூர் மக்கள், தீயணைப்புத் துறையினர் வரும் வரை காத்திராமல், உடனடியாக களத்தில் இறங்கி தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மாடிகளிலிருந்து குதித்தவர்களை மீட்கும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர தீ விபத்தில் இதுவரை மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் கொடுமை என்னவென்றால், பலியானவர்களில் 18 பேர் வெளிநாட்டினர் என்று தெரியவந்துள்ளது. டெல்லிக்கு சுற்றுலா மற்றும் தொழில் நிமித்தமாக வந்த வெளிநாட்டுப் பயணிகள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் டெல்லி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.