கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 76 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 95 அரசு நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 230 பள்ளிகளில் வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றம் ஆகியவை நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வட்டார அளவில், மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் முதன்மை கல்வி அதிகாரியின் ஆலோசனைப்படி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஐயப்பன் மாவட்ட அளவிலான போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். அந்த போட்டியில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சுண்டப்பற்றிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பிரவீன் குமார், கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஸ்ரீனு பிரசாத், வாத்தியார்கோணம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா, தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி ஆகியோர் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர். இந்த மாணவர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களை முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.