செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செங்குந்த பேட்டை குளக்கரை தெருவில் செந்தில்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில் அவரது மனைவி உறவினரான சம்பத்(40), அவரது மனைவி சத்யாலட்சுமி(35), அருணகிரி(35) ஆகியோர் காரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குன்னூர் மரப்பாலம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனையடுத்து இரவு 10:30 மணி அளவில் படுகாயமடைந்த 5 பேரையும் ஏட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணகிரியும், சத்யாலட்சுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.