தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோல்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6) மற்றும் தர்ஷன் (3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முண்டாசு புறவடை பகுதியில் வசித்து வந்துள்ளனர். அப்போது பிரியாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பிரியா தன்னுடைய கள்ளத்தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் பிரியாவை பழிவாங்க எண்ணியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் அவருடைய குழந்தைகள் இருவரையும் வெங்கடேஷ் கடத்தியுள்ளார்.

அவர் குழந்தைகளை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளளார். பின்னர் கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் கடுமையாக தாக்கி குழந்தைகளை கொடூரமாக கொலை  செய்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் அதியமான் கோட்டை காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்தனர். அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் அவர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பி ஓடி உள்ளார். அங்கு மின்கம்பியை வாயால் பிடித்து இழுத்து தற்கொலைக்கு அவர் முயன்றுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் கள்ளத்தொடர்பினால் இரு குழந்தைகள் பரிதாபமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.