கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கால் தடத்தை ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி தான் ஆடுகளை கொன்றது தெரியவந்தது. இதனால் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைத்து வனத்துறையினர் சிறுத்தை புலியை பிடிக்க முயற்சி செய்கின்றனர்.

நேற்று முன்தினம் வல்லாகுளத்துப்பாளையம் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை புலி கன்று குட்டியை கொன்று இழுத்து சென்றது. நேற்று 3-வது நாளாக வனத்துறையினரும், வருவாய்துறையினரும் அத்திப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர்.