கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீநிகா(5) என்ற மகளும், அனிருத்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று மாலை ஸ்ரீநிகாவும் அனிருத்தும் வீட்டிற்கு அருகில் இருக்கும் விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனையடுத்து விளையாட சென்ற தனது குழந்தைகள் வீட்டிற்குள் வராததால் அதிர்ச்சியடைந்த சந்திரிகா அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். அப்போது தனது குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததை அறிந்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அக்காள் தம்பியின் உடல்களை மீட்டனர். பின்னர் இரண்டு பேரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.