கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரியான்விளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முகேஷ்(19) நாகர்கோவிலில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முகேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் குமார் தனது மகனிடம் கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை என்றால் வேலைக்கு செல்லுமாறு கூறி கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை தின்று மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முகேஷை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.