கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. நேற்று பரங்கிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 14 மாணவர்கள் ஏற்றி கொண்டு பள்ளி பேருந்து பி.முட்லூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தீர்த்தம்பாளையம் பகுதியில் சென்ற போது திடீரென முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்ததும் பேருந்து ஓட்டுநர் முருகன் சாலை ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்த முருகன் உடனடியாக 14 மாணவர்களையும் பத்திரமாக கீழே இறக்கினார். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.