கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் சில்வர் பீச் மெயின் ரோட்டில் ஆவின் பால் கடை அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் வந்த ஒருவர் கடைக்கு வெளியே வைத்திருந்த பால் பாக்கெட் எந்த வித பதற்றமும் இல்லாமல் திருடி சென்றார்.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலானது. இதுகுறித்து கடை உரிமையாளர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பால் பாக்கெட்டுகளை திருடியது மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 16 வயது மகன் என்பது தெரியவந்தது.

அந்த சிறுவன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆட்டோவை வீட்டில் நிறுத்தி வைத்திருந்த போது இரவு நேரத்தில் சவாரி செல்வதாக கூறி ஆட்டோவில் சுற்றி வந்து தலா 23, 27, 30 ரூபாய்க்கு விற்கவேண்டிய பால் பாக்கெட்டுகளை தனக்கு தெரிந்த கடைகளில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்து அந்த பணத்தை செலவு செய்தது தெரியவந்தது. அந்த சிறுவனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்m