நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியில் செல்வராஜ் என்பவரது மகன் சசிகுமார் (27) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் நிதி வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் நேற்று மண் கரட்டில் இருந்து அலங்காநத்தம் செல்லும் சாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் சசிகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் சசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சசிகுமார் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக சசிகுமாரின் வீட்டிற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்  வழக்கு பதிவு செய்து சசிகுமாரின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அந்த பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சசிகுமார் கள்ளக்காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் பிரச்சினையால் கொலை செய்யப்பட்டாரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.