திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை சிறுமி தனது தாயிடம் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் தனது மகளுக்கு அறிவுரை கூறி பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமை திடீரென காணாமல் போய்விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெரியகுளம் சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி சாலையில் நடந்து சென்றது தெரியவந்தது. அதனை அடிப்படையாக வைத்து போலீசார் பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே நடந்து சென்ற சிறுமியை ஒரு மணி நேரத்தில் பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.