கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இரண்டு சுற்றுகள் முடிந்தும், முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலரான கிருண்னனுன்னி பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியுள்ளதாவது, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பற்றிய விவரம் ஒவ்வொரு சுற்று முடிவிலும், மைக்கில் அறிவிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வாக்கு எண்ணிக்கை அறிவிக்க வேண்டும் என்பது எந்தவித கட்டாயமும் இல்லை. மேலும் இதன் முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்பதைவிட, சரியாக   வெளியிட வேண்டும் என்பது தான் முக்கியம்.

இந்நிலையில் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேசையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதால், முறையாக சரிபார்த்து அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம் என்று ஆட்சியர் விளக்கம் அளித்தார்.